பேரவைத் தமிழ்விழா 2025
பேரவைத் தமிழ்விழா 2025
வடஅமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை சார்பாக “மாவீரர் நாள் நினைவேந்தல்” வரும் மாவீரர் நாளான நவம்பர் 27 ஆம் தேதி, இரவு 9 மணிக்கு (கிழக்கு சீர்தர நேரம்) இணையம் மூலமாக நடைபெற உள்ளது. நம் தமிழீழ மண்ணின் விடுதலைக்காக வீரமரணம் அடைந்த அனைத்து மாவீரர்களுக்கும் இந்த நினைவேந்தல் நிகழ்வில் அகவணக்கம் செலுத்தப்படும். இந்த நிகழ்வில் சிறப்புரையாற்ற இலங்கையில் இருந்து ஈழத்தமிழர் சுயாட்சிக் கழகத்தின் செயலாளர் திருமிகு.அனந்தி சசிதரன் அவர்களும், தமிழ்நாட்டில் இருந்து தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைவர் திரு.பெ.மணியரசன் அவர்களும் இணைகிறார்கள்.
இரண்டாயிரம் ஆண்டுகளைக் கடந்தும் இன்றுவரை உலகமக்களின் வாழ்வைச் செம்மைப்படுத்துகின்ற, தமிழர்களின் ஒப்புயர்வுற்ற நீதிநூல் திருக்குறள். மனிதவாழ்வின் முக்கிய அங்கங்களாகிய அறம், பொருள், இன்பம் ஆகியவற்றைப் பற்றி விளக்கும் திருக்குறளின், பெருமையை போற்றியும் ஏற்றியும் உலகெங்கும் உள்ள மக்களுக்குக் கொண்டு செல்வது நமது கடமை. அவ்வகையில், இவ்வரும்பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டுள்ள முனைவர்.திரு இர.பிரபாகரன் அவர்கள், எதிர்வரும் மாதங்களில், முதல் சனிக்கிழமைகளில் திருக்குறள் குறித்த சிறப்புத் தொடர்ச் சொற்பொழிவு ஒன்றை நிகழ்த்தவுள்ளார்.
எழுத்துலகில் 50 ஆண்டுகளைக் கடந்து எழுதி வருபவர் விட்டல் ராவ். சிறுகதைகள், புதினங்கள், திரைப்படம், ஓவியம், நாடகம், கலைகள் சார்ந்த ஆவணப்பதிவுகளாகக் கட்டுரைகள் என்று பல்வேறு வகைமைகளில் எழுதி வருபவர். நுண்கலைகள் குறித்து விரிவாகவும் ஆழமாகவும் எழுதியவர். ஓவியர், புகைப்படக் கலைஞர் என பன்முகம் கொண்டவரும் கூட. இலக்கியக்கூட்டத்தில் எழுத்தாளர் விட்டல் ராவ் கலந்துகொண்டு “விட்டல் ராவின் கதையுலகம்” என்ற தலைப்பில் உரையாற்றவுள்ளார். இந்நிகழ்வில் அனைவரும் கலந்துகொண்டு பயனடையுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
முனைவர் ராம் மகாலிங்கம் அவர்கள் மிச்சிகன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர், உளவியல்துறை அறிஞர், சமூகம்சார்ந்த உளவியல் ஆராய்ச்சிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருபவர், பல்கலைக்கழகத்திலும் உளவியல்சார் நிறுவனங்களிலும் விருதுகள் பல பெற்றவர், பேரவையின் “அமெரிக்கத் தமிழர் முன்னோடி” விருது பெற்றவர், இன்புற்று வாழ்ந்திருத்தல் எனும் தலைப்பில் பேசவுள்ளார். இளையோரும் பெற்றோரும் தவறாது பங்கேற்றுப் பயன்கொள்ள வேண்டிய நிகழ்ச்சி. அனைவரும் வருக!
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 28ஆம் நாள், புதன்கிழமை இரவு, கிழக்கு அளவீட்டு மணி 9, பசிபிக்நேரம் மாலை 6 மணி, இந்திய நேரம் ஆகஸ்ட் 29, காலை 6.30 அளவில், வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின், “கலை இலக்கியக் கூட்டம்” இணையவழியில் நிகழவுள்ளது. அக்கூட்டத்தில், “தமிழும் மக்களிசையும்” எனும் தலைப்பில் பாடகர், இசையமைப்பாளர், முனைவர் சித்தன் ஜெயமூர்த்தி அவர்களும், “நவீன இலக்கியம்” எனும் தலைப்பில் எழுத்தாளர் அருள்மொழி அவர்களும் நம்மிடையே உரையாற்றவுள்ளனர்.